ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ உயர்நிலைக் குழு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை (ஜன.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ஜாக்டோ- ஜியோ மாநில உயர்நிலைக் குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், மு.சுப்பிரமணியன், புலவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வலியுறுத்தப்படும் கோரிக்கைகள்

1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 2003 முதல் 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில்நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறுதுறை தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இதுதொடர்பாக, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் பல கட்டப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இந்தநிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே திட்டமிட்டபடி மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், காலவரையற்ற வேலைநிறுத்த தொடக்க நாளின்போது வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும், ஜன.23, 24 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தத்துடன் வட்ட அளவிலும், ஜன.25-ம் தேதி மாவட்ட அளவிலும் மறியல் போராட்டம் நடத்த வேண்டும்.

 முன்னதாக, இன்று (ஜன.21)காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாகதீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், ஜன.26-ல் ஜாக்டோ - ஜியோ மாநில உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன


Click here to read more

Post a Comment

Previous Post Next Post